வழிபாட்டில் தமிழ்மொழி வேண்டும் !
தமிழர் வீடுகளிலும்,கோயிலிலும் வழிபடும் மொழியாகத் தமிழ் வேண்டும்.
தமிழர்கள் வீட்டுக் கிரியைகளிலும், திருக்கோயிலிலும் தமிழ்மொழியில் வழிபாடு செய்ய வேண்டும். தமிழ்த் தேவாரத் திருவாசகம், பன்னிரு திருமுறைகள், ஆழ்வார்களின் திருவாய்மொழிகள் இவைகளெல்லாம் கருவறைக்கு வெளியிலே நீண்ட நாள்களாகவே பாடப்பட்டு வருகின்றன. அதனை மறுப்பதற்கில்லை. இவைகள் கோயில் கருவறைக்கு உள்ளும் , பூசைகளிலும் பாடப்படும்படியாக இருத்தல் வேண்டும். 'சமஸ்கிருத மந்திரங்களால் மாத்திரமே ஆண்டவனை மகிழ்விக்க முடியும்' என்ற கருத்து தமிழுக்கும்,தமிழருக்கும் இழுக்கானது. தமிழர்களாகிய நாமே, நம் மொழி கடவுளுக்கு விளங்காது என்று எண்ணுவது மிகவும் மோசமான மனப்பாங்காகும். தமிழில் பூசை செய்வதைக் காட்டில் சமஸ்கிருதத்தில் பூசித்தல் மிகுந்த பயனளிக்கும் என நம்புவது, நமது தாயை நாமே பழிப்பதிற்கு ஒப்பாகும்.
புதுமனை புகுவிழா, திருமணம், நீத்தார் கடன், வருடாந்திர திருப்பூசைகளில் தமிழில் வழிபாடு நடத்த அனைவரும் முன்வர வேண்டும். இதற்கென்று சிறப்பான பிரத்தியேக பூசை வழிமுறை கற்றல், கற்பித்தலை தமிழ்ச் சமூக அமைப்புகள் ஏற்பாடு செய்ய வேண்டும். நமக்குப் புரியாத ஏதோ ஒரு மொழியில் வழிபாடு செய்வதைக் காட்டிலும், பாடினால் கல்லும் உருகும் தமிழ்த் தேவாரத் திருவாசகங்களைப் பாடி வழிபாடு நடத்தல் வேண்டும். தமிழ் வாழிபாட்டு மரபை முற்றிலும் துடைத்தொழித்த சமஸ்கிருத வழிபாட்டு முறைமையையும், அதனை ஊக்குவிக்கும் சாமியார்களையும் புறகனிப்போம். தமிழும் , சமஸ்கிருதம் இரண்டு கண்போன்றது என்ற பித்தலாட்டக் கருத்துகளை ஏற்காமல், தாய்மொழிக்கு முன்னுரிமை தந்து பூசைகள் நடத்தப்பட வேண்டும்.
திருக்குறள், ஆத்திச்சூடி, வெண்பா, மூதுரை,நல்வழி,உலக நீதி ஆகியவைகள் எல்லாம் தமிழ்மொழி கல்வியோடு நின்று விடாமல், அவைகள் முறையே வழிபாட்டிலும் பாடுதல் வேண்டும்.
வாலை அறிவாலயம்,
சாயடிமை.
Comments
Post a Comment